Thursday 29 September 2016

குளிர் காலத்தில் அதிகாலையில் மூச்சுவிட சிரமம் ஏற்படுவது இயல்பு. ஆனால், சிலருக்கு வியர்த்துக் கொட்டும் வெயில் காலத்திலும் கூட காலை வேளையில் மூச்சு திணறல் ஏற்படும். இதை சுவாசக் கோளாறு என எண்ணி சாதாரணமாக இருக்க வேண்டாம், உங்கள் இதயம் பலவீனம் அடைந்து வருகிறது என்பதை வெளிகாட்டும் அறிகுறி இது.
ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத் தன்மை குறைபாடு, பெண்களுக்கு முன்கூட்டியே நிற்கும் மாதவிடாய் போன்றவையும் கூட இதயம் பலவீனம் அடைந்து வருகிறது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் தான் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இவை மட்டுமின்றி, கால்களில் வீக்கம், ஈறுகளில் இரத்த கசிவு, குறட்டை என சில வழக்கத்திற்கு மாறான அறிகுறிகள் கூட இதயம் பலவீனம் அடைந்து வருகிறது என்பதற்கான அறிகுறிகளாக தான் தென்படுகிறது….
ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத்தன்மை குறைபாடு, தமனி சார்ந்த நோய்களை குறித்து வெளிப்படும் பொதுவான அறிகுறியாக காணப்படுகிறது. நமது உடலின் தமனிகளில் ஏற்படும் ப்ளாக் ஆண்மையை குறைத்து, இதய கோளாறு ஏற்பட காரணியாக இருக்கிறது என கூறப்படுகிறது.
பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலம் சீக்கிரமாக ஏற்படுவது இதய பாதிப்புகள் ஏற்படுவதற்கான காரணிகளாக கூட இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால், இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவு போன்றவை ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கின்றன.
இன்றைய வாழ்வியல் முறையில் பெண்கள் மத்தியில் உடல் உழைப்பு குறைந்து வருவது தான் இதற்கான பெரிய காரணியாக கருதப்படுகிறது.
மூச்சு திணறல் ஏற்படுவதற்கான பொதுவான காரணி குறட்டை. இரவு முழுவதும் உறங்கியும், காலையில் தூக்கம் வருவது, சில நேரத்தில் உறங்கும் போது சுவாசிப்பதை நமக்கே தெரியாமல் நிறுத்துவது போன்றவை நிறைய உடலியல் மாற்றங்கள் ஏற்படுத்துகிறது. இதனால், இதய நோய் பாதிப்பு ஏற்படும் சதவீதம் அதிகரிக்கிறது.
மேலும், இது இதயத் துடிப்பு விகிதத்தில் குறைபாடு ஏற்பட்டிருக்கிறது என்பதை வெளிபடுத்தும் அறிகுறியாகவும் இருக்கிறது. எனவே, தூக்கத்தில் மூச்சு திணறல் ஏற்படுவதை சாதாரணமாக எண்ண வேண்டாம். உடனே சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
ஈறுகளில் இரதம் கசிவது ஈறு சார்ந்த பிரச்சனையாக மட்டுமின்றி, இதய நலன் குறைபாடாக கூட இருக்கலாம். இரத்தத்தில் ஏற்படும் பாதிப்பு உடல் முழுதும் பிரச்சனை ஏற்படுத்த வல்லது. அதிலும் முக்கியமாக தமனிவழியாக இதய நோய்கள், மாரடைப்பு போன்றவற்றை உண்டாகவும் இது காரணியாக அமையலாம்.
எனவே, ஈறுகள் அல்லது பற்களில் இரத்தம் கசிதல் ஏற்பட்டாலோ, மிகுதியான வலி இருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.
இதயத்தில் செயல்திறன் குறைபாடு ஏற்பட்டுள்ளது என்பதை வெளிகாட்டும் அறிகுறியாக கூட கால்களில் வீக்கம் தென்படலாம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
சில சமயங்களில் அதிக நேரம் நின்று கொண்டு வேலை செய்தால் கூட கால் வீக்கம் ஏற்படலாம். ஆனால், அது ஒரே இரவில் சரியாகிவிடும். நாட்கள் செல்ல செல்ல கால் வீக்கம் அதிகரிப்பது இதய செயலிழப்பு ஏற்படுவதற்கான அறிகுறியாகும்.
அனைவருக்குமே இதயத்தின் மீது ஓர் யானை உட்கார்ந்து அழுத்துவது போன்றோ, தோள்பட்டையை யாரோ பிழிந்து எடுப்பது உணர்வு ஏற்படுவதில்லை. ஏனெனில் இது மாரடைப்பு ஏற்படலாம் என்பதற்கான அறிகுறிகள்.
தொடர்ந்து, கழுத்து, தோள்பட்டை பகுதிகளில் வலி இருந்து கொண்டே இருப்பது இதய வலி அல்லது மாரடைப்பிற்கான அறிகுறியாக கூறப்படுகிறது.
மேல் வயிறு பகுதியில் எரிச்சல் அல்லது வலி போன்ற உணர்வு ஏற்படுவது, தொடர்ந்து இரைப்பை அசௌகரியமாக உணர்தல், சில சமயத்தில் ஏன் என்றே தெரியாமல் விக்கல் எடுப்பது போன்றவை கூட இதய வலி அல்லது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்.
குமட்டல், வியர்வை, மூச்சு தடைப்படுதல், தலை சுற்றல் போன்றவை ஏற்பட்ட சில மணி நேரத்தில் சிலருக்கு இதய வலி, மாரடைப்பு போன்றவை ஏற்பட்டு மருத்துவமனைக்கு வந்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

No comments:

Post a Comment