சௌபாக்யம் அருளும் சங்கடஹர சதுர்த்தி
ஓம் தத் புருஷாய வித் மஹே வக்ர
துண்டாய தீமஹி தன்னோ
தந்தி ப்ரசோ தயாத்''
ஸ்ரீ கணநாயகாஷ்டகம் :
ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸந்நிபம் I
லம்போதரம் விசா'லாக்ஷம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II
விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அருகம்புல் மாலை சாற்றி சங்கடஹர சதுர்த்தி தினத்தில் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் சிறப்பு ..!
விநாயக விரதத்தை அங்காரகன் (செவ்வாய்) அனுஷ்டித்து நவக்கிரகங்களில் ஒன்றான பதவி பெற்றதால் சங்கட ஹர சதுர்த்தி விரதம் அங்காரக சதுர்த்தி விரதம் என்றும் அழைக்கப்படுகிறது.
அன்னை பார்வதி தன் பதியை அடைய கணபதியே சங்கட ஹர சதுர்த்தி விரதத்தைச் சொல்லி அருளினார்
இந்திரன், சிவன், இராவணன் போன்றோர் சங்கட ஹர சதுர்த்தி விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர்.
அனுமன் சீதையைக் கண்டது, தமயந்தி நளனை அடைந்தது, அகலிகை கௌதமரை அடைந்தது, பாண்டவர்கள், துரியோதனாதியரை வென்றது போன்றவை நிகழ்ந்ததும் சங்கட ஹர சதுர்த்தி விரதத்தின் மகிமையால் தான்.
ஒவ்வொரு தமிழ் மாதமும் தேய்பிறையில் வரும் “கிருஷ்ண” பட்ச சதுர்த்தி விரதத்தைத்தான் சங்கடஹர சதுர்த்தி விரதம் என்றும், சங்கஷ்ட ஹரண சதுர்த்தி விரதம் என்றும் கூறுகின்றனர்.
சங்கடம் என்றால் துன்பம் என்றும், ஹர என்றால் ஒழிப்பது என்றும், சங்கடஹர என்றால் சங்கடங்களில் இருந்து விடுதலை - துன்பங்களிலிருந்து விடுதலை என்பதாகும்.
சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பதால் நினைத்த காரியம் கூடும்.
வீண் பழி அகலும். பகைவர்களும் நண்பர்களாவார்கள்.
தீவினை அகலும். மனச்சுமை நீங்கும்...!
வளர்பிறை சதுர்த்தி தினத்தில் சந்திரனைப் பார்த்ததால், கெட்ட பெயர் ஏற்பட்டு, அதை நீக்க வேண்டி, ஸ்ரீ விநாயகருக்கு தேய்பிறை சதுர்த்தி தினத்தில் பூஜை செய்த ஸ்ரீ கிருஷ்ணருக்கு விநாயகர் அபவாதம் நீங்குவதற்கு அனுக்கிரகம் செய்தார்.
ஸ்ரீ கிருஷ்ணர் வழிபாடு செய்து, கெட்ட பெயர் நீக்கிக்கொண்டு நற்பெயர் பெற்றதை நினைவு கூறும் வகையிலும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு சிறப்பானதாகிறது.
சங்கடஹர சதுர்த்தி தின வழிபாட்டினால், சனி பகவானின் பார்வையால் ஏற்படும் தோஷங்களும், சகல் ரோகங்களும் நோய்களும் நீங்குகின்றன
சங்கட ஹர சதுர்த்தி ஒவ்வொரு மாதமும் உண்டு.
விநாயகர் சதுர்த்திக்கு (ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி) முன்னதாக வரும் சங்கடஹர சதுர்த்திக்கு மஹா சங்கட ஹர சதுர்த்தி என்று பெயர்.
வருடத்தின் அனைத்து சங்கடஹர சதுர்த்தி வழிபாடுகளையும் செய்த பலன் ஒரு மஹா சங்கடஹர சதுர்த்தியில் வழிபாடு செய்வது கிடைக்கப் பெறும்.
சங்கடஹர சதுர்த்தியன்று எக்காரணம் கொண்டும் சந்திரனைப் பார்க்கக் கூடாது
சங்கடஹர சதுர்த்தியன்று சந்திரன் வெகுநேரம் கழித்துத்தான் வானத்தில் தோன்றுகிறது..!.
கிரகங்களில் அழகோடு கவர்ச்சியும் இருந்ததால் சந்திரனுக்கு ஆணவம் ஏற்பட்டது.
சிறிய எலிமீது பெரிய விநாயகரின் நர்த்தனக் காட்சிகளை கண்டு ஆகாயத்தில் சந்திரன் பரிகசித்து சிரித்தான். வெகுண்ட விநாயகர் சாபத்தால் சந்திரன் ஒளி மங்கி போனான்.
தேவர்கள் விநாயகரை சரண் புகுந்து சந்திரனை மன்னித்து அருளும் படி கூறினார்கள்.
விநாயகரும் சாந்தமடைந்து பதினைந்து நாட்கள் ஒளி மங்கி போகவும் பதினைந்து நாட்கள் ஒளி அதிகரிக்கவும் அருளினார்.
விநாயக சதுர்த்தி தினத்தில் சந்திரனை வழிபடுவோருக்கு நன்மைகள் கிடைக்கவும் அருள் செய்ததன் அடிப்படையிலேயே சதுர்த்தி தினத்தன்று சந்திர தரிசனம் செய்யும் வழக்கம் உண்டாயிற்று
No comments:
Post a Comment