Friday 1 April 2016

நம் உணவுமுறையில் மிக முக்கிய இடம் பிடிப்பது ரசம். என்னதான் தடபுடலாக கறிக்கஞ்சியோ, 16 கூட்டு பெருவிருந்தோ வைத்தாலும், நிறைவு பெறுவது ரசத்தில் தான். ரசத்தை சோற்றில் மிதக்க மிதக்க ஊற்றி அள்ளிப் பருகும் நபர்கள் இருக்கிறார்கள். கிளாஸில் ரசத்தை ஊற்றி உறிஞ்சிக் குடிக்கும் ரசவாதிகளும் இருக்கிறார்கள். மொத்தத்தில் ரசத்திற்கு எந்தப் பக்கம் பார்த்தாலும் ரசிகர் பட்டாளம். இந்த ரசம் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்று. ரசம் குடிக்கும் யாருக்கும் தெரியாது. ரசம் விருந்தில் நிறைவு மட்டும் தருவதல்ல; உடலுக்கும் நிறைவு தருகிறது மருந்தாக இருந்து.
ரசத்தின் நன்மைகள்
ரசத்தில் மக்னீசியம், காப்பர், செலினியம், ஜிங்க், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற கனிமச் சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆகவே, அன்றாடம் இதனை சிறிது உணவில் சேர்த்து வந்தால், உடலில் ஒரு சில குறைபாடுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
குழந்தைகள் உணவை உண்ண மறுக்கும் வேளையில் ரசத்தை ஊற்றிப் பிசைந்து கொடுத்தால் ஆர்வத்துடன் உண்பார்கள். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவை லிஸ்டில் ரசமும் இருக்கிறது. இவ்வாறு, குழந்தைகளுக்கு ரசம் சாதம் கொடுப்பதால், அவர்களின் செரிமானம் சீராக நடைபெற்று, அவர்களுக்கு எவ்வித பிரச்சனையும் ஏற்படாமல் இருக்கும். மேலும், பெரும்பாலான குழந்தைகளுக்கு முதன்முதலில் கொடுக்கும் திட உணவுகளில் முதன்மையானது ரசம் எனலாம்.
நோய் வாய்ப்படும் வேளையில், சிலருக்கு ரசம் சாதம் எடுத்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைப்பது உண்டு. நோயாளிகள் ரசத்தை எடுத்துக் கொள்ளும் போது உடல் ரீதியாக பல நன்மைகள் கிடைக்கின்றன. அவர்கள் ரசம் உட்கொண்டு வரும் போது, அதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள், உடலுக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் புரோட்டீனை அதிகரித்து உடலை விரைவில் குணமாக்கி விடும்.
ரசத்தில் ஆன்டி & ஆக்ஸிடண்ட்டுகள் அதிகம் காணப்படுகின்றது. பலருக்கு இந்த உண்டை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், ரசத்தில் ஆன்டி & ஆக்ஸிடண்ட் அதிகம் நிறைந்த புளி இருப்பதால், அது சருமத்திற்கு மிகவும் நல்லது. ரசம் உடனடி நிவாரணி என்று கூறலாம். ஏனெனில், ரசமானது வயிற்றுப்போக்கு, அசிடிட்டி, வாயுத்தொல்லை, செரிமான பிரச்சனை போன்றவற்றில் இருந்து உடனடி நிவாரணம் வழங்கக் கூடியவை. மேலும், இது மிகவும் விலை குறைவில் வேகமாக செய்து சாப்பிடக் கூடிய சமையலாதலால், தவறாமல் உணவில் சேர்த்து வாருங்கள்.
ரசம் உட்கொண்டு வந்தால், புற்றுநோயின் தாக்கம் குறையும். இதற்கு முக்கிய காரணம், ரசத்தில் சேர்க்கப்பட்டு உள்ள மஞ்சள் மற்றும் மிளகு தான். இவையே புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.
ரசத்தை அன்றாடம் சேர்த்து வந்தால், குடலியக்கம் சீராக இயங்கி, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கலாம். அதிலும், மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படும் போது சூடாக ஒரு கப் ரசம் குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
கர்ப்பிணிகள் கூட ரசத்தை உணவோடு உட்கொள்ளலாம். ஏனெனில், அதில் புரோட்டீன், வைட்டமின், ஆன்டி & ஆக்ஸிடண்ட் மற்றும் தியாமின் போன்றவைகள் அதிகம் நிறைந்து உள்ளது. இதனால் தான், இது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. மேலும், ரசம் குடலியக்கத்தை சீராக இயக்கும். இதனால், கர்ப்ப காலத்தில் சந்திக்கும் பல பிரச்சனைகள் குறையும்.
ரசத்தில் முக்கியமான வைட்டமின்களான ரிபோப்ளேவின், நியாசின், வைட்டமின் ஏ மற்றும் சி, போலிக் ஆசிட் மற்றும் தியாமின் போன்றவைகள் அதிகம் நிறைந்துள்ளது. இதனால் தான் இது ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது.

No comments:

Post a Comment