Tuesday 5 April 2016

பத்திரகிரியாரின் மெய்ஞ்ஞானப் புலம்பல்



ஒட்டாம லொட்டிநிற்கும் உடலுமுயிரும் பிரித்தே
எட்டாப் பழம்பதிக்கிங் கேணிவைப்ப தெக்காலம்.
பாசத்தை நீக்கிப் பசுவைப்பதியில் விட்டு
நேசத்தி னுள்ளே நினைந்திருப்ப தெக்காலம்.
ஆசார நேய அனுட்டானமும் மறந்து
பேசா மெய்ஞ் ஞானநிலைப் பெற்றிருப்ப தெக்காலம்.
பல்லாயி ரங்கோடிப் பகிரண்ட மும்படைப்பே
அல்லாது வேறில்லையென்று அறிவதினி யெக்காலம்.
ஆதிமுத லாகிநின்ற அரியென்ற வட்சரத்தை
ஓதி யறிந்துள்ளே யுணர்வதினி யெக்காலம்.
சாத்திரத்தைச் சுட்டுச் சதுர்மறையைப் பொய்யாக்கிச்
சூத்திரத்தைக் கண்டு துயரறுப்ப தெக்காலம்.
அல்லும் பகலுமென்றன் அறிவையறி வாலறிந்த
சொல்லும் முறைமறந்து தூங்குவது மெக்காலம்.
இயங்குஞ் சராசரத்தில் எள்ளுமெண்ணெ யும்போல
முயங்குமந்த வேத முடிவறிவ தெக்காலம்.
ஊனாகி யூனில் உயிராகி யெவ்வுலகுந்
தானாகி நின்ற தனையறியவ தெக்காலம்.
என்னைவிட்டு நீங்காம என்னிடத்து நீயிருக்க
உன்னைவிட்டு நீங்கா தொருப்படுவ தெக்காலம்.
இன்னதென்று சொல்லவொண்ணா எல்லையற்றவான் பொருளைச்
சொன்ன தென்று நானறிந்து சொல்வதினி யெக்காலம்.
மனதையொரு வில்லாக்கி வான்பொறியை நாணாக்கி
எனதறிவை அம்பாக்கி எய்வதினி யெக்காலம்.
என்னை இறக்கவெய்தே என்பதியை யீடழித்த
உன்னை வெளியில்வைத்தே ஒளித்துநிற்ப தெக்காலம்.
கடத்துகின்ற தோணிதனைக் கழைகள் குத்தி விட்டாற்போல்
நடத்துகின்ற சித்திரத்தை நானறிவ தெக்காலம்.
நின்றநிலை பேராமல் நினைவிலொன்றும் சாராமல்
சென்றநிலை முத்தியென்று சேர்ந்தறிவ தெக்காலம்.
பொன்னும் வெள்ளியும் பூண்ட பொற்பதத்தை யுள்ளமைத்து
மின்னு மொளிவெளியே விட்டடைப்ப தெக்காலம்.
கூட்டிலடைப் பட்டபுழு குளவியுருக் கொண்டதுபோல்
வீட்டிலடைப் பட்டருளை வேண்டுவது மெக்காலம்.
கடலில் ஒளித்திருந்த கனலெழுந்து வந்தாற்போல்
உடலில் ஒளித்தசிவம் ஒளிசெய்வ தெக்காலம்.
அருணப் பிரகாசம் அஇண்டமெங்கும் போர்த்ததுபோல்
கருணைத் திருவடியில் கலந்துநிற்ப தெக்காலம்.
பொன்னிற் பலவிதமாம் பூரணமுண் டானாது போல்
உன்னிற் பிறந்ததுன்னில் ஒடுங்குவது மெக்காலம்.
நாயிற் கடைப்பிறப்பாய் நான்பிறந்த துன்பமற
வேயிற் கனலொளிபோல் விளங்குவது மெக்காலம்.
சூரிய காந்தியொளி சூழ்ந்து பஞ்சைச் சுட்டதுபோல்
ஆரியன் தோற்றத் தருள்பெறுவ தெக்காலம்.
இரும்பிற் கனல்மூட்டி இவ்வுருபோய் அவ்வுருவாய்க்
கரும்பிற் சுவைரசத்தைக் கண்டறிவ தெக்காலம்.
கருக்கொண்ட முட்டைதனை கடலாமை தானினைக்க
உருக்கொண்டவாறதுபோல் உனையடைவ தெக்காலம்.
வீடுவிட்டுப் பாய்ந்து வெளியில் வருவார்போல்
கூடுவிட்டுப் பாயுங் குறிப்பறிவ தெக்காலம்.
கடைந்த வெண்ணை மோரிற் கலவாத வாறதுபோல்
உடைந்து தமியேன் உனைக்காண்ப தெக்காலம்.
இருளை ஒளிவிழுங்கி ஏகவுருக் கொண்டாற்போல்
அருளை விழுங்குமிருல் உகன்றுநிற்ப தெக்காலம்.
மின்னெழுந்து மின்னொடுங்கி விண்ணில் உறைந்தாற்போல்
என்னுள்நின்றது என்னுள்ளே யானறிவ தெக்காலம்.
கண்ட புனற்குடத்திற் கதிரொளிகள் பாய்ந்தாற்போல்
கொண்ட சொரூபமதைக் கூர்ந்தறிவ தெக்காலம்.
பூணுகின்ற பொன்னணிந்தாற் பொன்சுமக்குமோ வுடலை
காணுகின்ற என்கருத்திற் கண்டறிவ தெக்காலம்.
செம்பிற் களிம்புபோற் சிவத்தை விழுங்குமிக
வெம்பிநின்ற மும்மலத்தை வேறுசெய்வ தெக்காலம்.
ஆவியுங் காயமும்போல் ஆத்துமத்து நின்றதனைப்
பாவி யறிந்துமனம் பற்றிநிற்ப தெக்காலம்.
ஊமைக் கனாக்கண் டுரைக்கறியா இன்பமதை
நாமறிந்து கொள்வதற்கு நாள்வருவ தெக்காலம்.
சாகாச் சிவனடியைத் தப்பாதார் எப்போதும்
போகா உடலகன்று போவதென்ப தெக்காலம்.
நிட்டை தனைவிட்டு நினைவறிவு தப்பவிட்டு
வெட்ட வெளியில் விரவிநிற்ப தெக்காலம்.
வெட்டவெளி தன்னில் விளைந்த வெம்பாதத்தை
திட்டமுடன் கண்டு தெளிவதினி யெக்காலம்.
எங்கும் பரவடிவாய் என்வடிவு நின்வடிவாய்க்
கங்குல்பக லின்றியுனைக் கண்டிருப்ப தெக்காலம்.
உண்டதுவும் மாதருடன் கூடிச் சேர்ந்தின்பங்
கண்டதுவு நீயெனவே கண்டு கொள்வ தெக்காலம்.
ஈமென்று கேட்டதுவும் என்னுள்ளே நின்றதுவும்
ஓமென்று சொன்னதுவும் உற்றறிவ தெக்காலம்.
சத்தம் பிறந்தவிடந் தன்மயமாய் நின்றவிடஞ்
சித்தம் பிறந்தவிடந் தேர்ந்தறிவ தெக்காலம்.
போக்கு வரவும் புறம்புள்ளு மாகிநின்றும்
தாக்கு மொரு பொருளைச் சந்திப்ப தெக்காலம்.
நானெனவு நீயெனவு நாமிரண்டு மற்றொன்றும்
நீயெனவே சிந்தைதனி நேற்படுவ தெக்காலம்.
அறிவையறி வாலறிந்தே அறிவும் அறிவுதனில்
பிறிவுபட நில்லாமல் பிடிப்பதினி யெக்காலம்.
நீடும் புவனமெல்லாம் நிறைந்துசிந் தூரமதாய்
ஆடும் திருக்கூத்தை அறிவதினி யெக்காலம்.
தித்தியென்ற கூத்தும் திருச்சிலம்பி னோசைகளும்
பத்தியுடனே கேட்டுப் பணிவதினி யெக்காலம்.
நயனத் திடைவெளிபோய் நண்ணும் பரவெளியில்
சயனத் திருந்து தலைப்படுவ தெக்காலம்.
அருவி மலைநடுவே ஆயிரக்கால் மண்டபத்தில்
திருவிளையா டற்கண்டு தெரிசிப்ப தெக்காலம்.
மீனைமிக வுண்டு நக்கி விக்கிநின்ற கொக்கதுபோல்
தேனைமிக வுண்டு தெவிட்டிநிற்ப தெக்காலம்.
பொல்லாத காயமதைப் போட்டு விடுக்குமுன்னே
கல்லாவின் பால்கறப்பக் கற்பதினி யெக்காலம்.
வெட்டவெளிக் குள்ளே விளங்குஞ் சதாசிவத்தைக்
கிட்டிவரத் தேடிக் கிருபை செய்வ தெக்காலம்.


No comments:

Post a Comment